சனி, 19 மார்ச், 2016

பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை- பாகம் 2 விகடன் ..

.

பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி எப்பொழுதும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அதனால் சசிகலாவின் அக்கா மகன் தினகரனை கட்சிக்கு கொண்டு வந்து 1999 ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைத்தார் சசிகலா. முதலில் தினகரனை எதிர்த்து திமுக சார்பில் கம்பம் செல்வேந்திரன் போட்டியிட்டார். அப்போது பன்னீர் பெரியகுளம் நகராட்சி சேர்மன். அவர் செல்வேந்திரனின் மூலம் கட்சிக்கு வந்தவர் என்பதால் அவருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்று பயந்த சசிகலா முதலில் தேர்தல் வேலைகளை பன்னீருக்கு கொடுக்க தயங்கினார். 

அவரின் சந்தேகத்தை அறிந்த பன்னீர் கடன் வாங்கி தினகரனுக்கு தேர்தல் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் வேலைகள் தொடர்பான கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களில் தினகரன் முன்பு உட்காரமல் நின்று கொண்டே இருப்பாராம். தினகரனின் மனதையும் அந்த பணிவை வைத்தே கரைத்தார். ஆமாம்... பன்னீரின் பணிவில் தினகரன் திக்குமுக்காடிப்போனார்.
தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். பன்னீரும் தினகரனின் தீவிர ஆதரவளாராக மாறினார். தேனி நகரில் எம்.பி அலுவலகம் போட்ட தினகரனுக்கும் வழக்கம்போல மீன் குழம்பும் நாட்டுக்கோழி குழம்பும் பார்சல் அனுப்ப தொடங்கினார். அதுமட்டுமின்றி தினகரனை எல்லாவகையிலும் கவனித்துக்கொண்டார். அதன் பிறகு பன்னீர் இல்லாமல் தினகரனுக்கு தினசரி விடியாது என்றாக மாறியது. பிறகு பன்னீர் செய்த முதல் வேலை தினகரனின் எம்.பி அலுவலகத்தை பெரியகுளத்தில் தன் வீட்டின் அருகே அவரின் முதல் வெற்றி.

பன்னீரின் அரசியல் பயணம் ஆரம்பம்
பெரியகுளத்துக்கு தினகரன் போன அந்த தினம்தான் அதிமுகவில் பன்னீரின் வெற்றிப்பயணம் தொடங்கியது எனலாம். பன்னீரும் அவரின் தம்பி ராஜாவும் தினகரனை தங்கள் பணிவாலும் அன்பாலும் குளிப்பாட்டினார்கள். தினகரனால் அவர்களை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. இதற்கு இடையில் 2001 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் வந்தது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடமுடியவில்லை. அப்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு பன்னீரின் பெயரை தினகரன் பரிந்துரை செய்தார். பன்னீரின் சதுரங்க வேட்டை ஆரம்பமானது. 

அப்போது திமுக வேட்பாளர் அபுதாஹிர். அவரை பன்னீர் செமையாக கவனிக்க, தேர்தல் பணிகளில் திமுக பக்கம் சுணக்கம். பன்னீர் எளிதாக வென்றார். தேர்தல் முடிவு வந்த அடுத்தநாளே அபுதாஹீர் அதிமுகவில் இணைந்து கொண்டார். இன்றும் அந்த அபுதாஹிர்தான் பன்னீரின் நிழல். பன்னீரின் ப்ராப்பர்ட்டியை இவர்தான் நிர்வாகம் செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். 

 இந்த நிலையில் யார் முதல்வர் என்று தமிழகமே திகைத்து நின்றபோது பன்னீரை சசிகலாவிடம் அழைத்துச்செல்கிறார் தினகரன். சசியிடமும் பன்னீர் அதே பணிவுகாட்ட அவரும் ‘வாட் ய மேன்’ என அசந்துபோனார். பிறகு நிறைய விஷயங்கள் பேசப்பட்டது. ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அன்று பத்தடி தள்ளி நின்று சாஷ்டாங்கமாக ஜெயாவின் காலில் விழுந்த பன்னீரின் பணிபு அப்ரோச் ஜெயலலிதாவுக்கு பிடித்துபோனது. அன்று குனிந்த பன்னீர் இதுவரை நிமிரவே இல்லை. அப்படிப்பட்ட பன்னீரா தனக்கு எதிராக அணி திரட்டினார் என்பதைத்தான் ஜெயாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

‘அவ்வளவும் நடிப்பா கோப்பால்’ என்ற அந்த மொமன்ட்தான் ஜெயாவின் உச்சபச்ச கோபம். அந்த கோபம்தான் பன்னீரை இன்று தலைமறைவாக சுற்ற வைத்தது.
2001 செப்டம்பரில் பன்னீர் முதல்முறையாக முதல்வரானார். ஆனால் முதல்வருக்கான கார், நாற்காலி... என அனைத்தையும் தவிர்த்துவிட்டு பன்னீருக்கு என்று எல்லாமே தனித்தனியாக கொண்டு வரப்பட்டது.
‘ச்சே... இவ்வளவு தன்மையான ஒரு மனிதரா? ஜெயலலிதாவுக்கு இப்படி ஒரு விசுவாசியா?’ என்று தமிழகமே வியந்தது. ‘அதிகாரம், ஆடம்பரத்தை பன்னீர்தான் பவ்வியமாக ஒதுக்கினார்’ என்று தமிழகம் நினைத்தாலும் உண்மை அதுவல்ல. பன்னீர் என்ன சாப்பிடணும், எப்படி பேசணும், என்ன மாதிரி ஆடை அணியணும், எப்படி உட்கார வேண்டும்... என அனைத்தும் சசிகலா, தினகரன் அணியால் முடிவுசெய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டார். பன்னீரின் குடும்பத்தில் இருந்து யார் சென்னைக்கு வந்தாலும் கண்காணிக்கப்பட்டார்கள். அதனால் தனது உறவினர் யாரையும் தனது பக்கத்தில் சேர்த்துக் கொள்ளவே தயங்கினார் பன்னீர்.
ஆறுமாதகாலம் முதல்வராக இருந்தார் பன்னீர். அந்த ஆறு மாத காலத்தில் ஏகப்பட்ட நெருக்கடிகளை சந்தித்தார். ஆனால் அது குறித்து அவர் யாரிடமும் வாயை திறக்கவே இல்லை. இதனால் மேலிடம் பன்னீரின் விசுவாசத்தை நம்பியது. அதன் பரிசாக பன்னீருக்கு பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, சிறைத்துறை என்று பத்துத் துறைகள்  கொடுக்கப்பட்டன.

அப்போது பன்னீரின் பணிவு பலருக்கு வசதியாகிவிட்டது. அதைப் பயன்படுத்தி கோடி கோடியாய் ஒதுக்க ஆரம்பித்தனர். அப்படி சம்பாதித்த பணத்தை வைத்து அவர்கள் லண்டன், மலேசியாவில் சொத்துக்களாக மாற்றியதாகவும் சொல்கிறார்கள்.

நெல்லுக்குப்  பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயும் என்பதுபோல அவர்களின் காட்டில் அடைமழை என்றால் பன்னீரின் காட்டிலும் தூறல்கள் கூடவா விழாமல் இருக்கும். அந்தத்  தூறல்களை எப்படி சேகரிப்பது என்று தவித்தபோதுதான் பன்னீரின் உறவுகள் பலர், அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் என்ற பெயரில் உள்ளே வந்தனர்.

தனது மூத்த மகன் ரவீந்திரநாத் குமாருக்கு, ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கந்தசாமி வீட்டில் சம்பந்தம் செய்தார். மகளை கோவில்பட்டியில் வழக்கறிஞர் தொழில் செய்து வந்த செல்லப்பாண்டியன் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவர்கள் மூலம் பன்னீருக்கு பெரும் உறவு பலம் கிடைத்தது. 

சொத்துக்குவிப்பு வழக்கும் – பன்னீரின் செழிப்பும்

பன்னீர் செல்வம் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை முதல்வர், பிறகு அமைச்சர்... என இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெரியகுளம் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு மதுரைக்கு மாறி பிறகு சிவகங்கைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் பெங்களூரூவில்  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நோக்கி நகர்ந்தது. இதற்கு இடையில் பன்னீரின் மேல் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் அடிஷனல் அட்வகேட் ஜெனரலாக இருக்கும் பன்னீரின் சம்பந்தி செல்லப்பாண்டியன் மூலம் கடுமையாக ‘வாதாடி’னார்.  அந்த வழக்கில் இருந்து பன்னீர் விடுதலையானார்.

அதன் பிறகு பன்னீருக்கு நெருக்கமான வக்கீல்கள் இரண்டு நபர்கள்,  தினசரி பெங்களூருவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தன்மையை நோட்டமிட்டனர். அதன்பிறகு அந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்தும் அப்பாவியான பன்னீர் மீண்டும் அடேங்கப்பா முதல்வரானார்.

அரியணை ஏறியதும் ஆட்டம்

சொத்துக்குவிப்பு வழக்கில், 2014 செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூருவில்  உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதாவை அடைத்ததும், தமிழகமே திக்கு முக்காடிப்போனது. பெரும்பாலான உயர் அதிகாரிகள், அனைத்து துறைகளின் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என்று அனைவரும் பெங்களூருவில் முகாமிட்டனர். மாலை ஆறு மணிக்கெல்லாம் சிறைச்சாலையின் வாசலில் ஜெயலலிதாவை சிறையில் அடைத்த சோகத்தில் கதறி அழுது கொண்டே இருந்தனர். அந்த இரவில் அடுத்த முதல்வர் யார் என்கிற பேச்சு வந்த பொழுது ஜெயலலிதா மட்டும் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து இருந்தார். அது மீண்டும் பன்னீரை முதல்வராக ஆக வேண்டும் என்று. ஆனால் அந்த முடிவில் சசிகலாவுக்கு விருப்பம் இல்லை.

அதற்கு இடைப்பட்ட நேரத்தில்,  அந்த இரவில்,  பன்னீர்செல்வம் பெங்களூருவில் இருந்த அவரது அறையில் விடியும்வரை தூங்கவே இல்லை. ஏனெனில் பன்னீருடன் போட்டியில் கரூர் செந்தில்பாலாஜி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் என்று லிஸ்ட் இருந்தது. இதற்கிடையில் பன்னீர் செல்வத்தினை மீண்டும் முதல்வராக ஆக்கியதில் சசிகலாவின் குரூப்பில் இருந்தே  ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ஜெயலலிதாவால், ஏகமனதாக பன்னீர் தேர்வானார். கடந்த முறை பன்னீர் முதல்வராக இருந்தபொழுது ஒதுங்கி இருந்த அவரின் சொந்தங்கள் இந்த முறை அனைவரும் சென்னையை நோக்கி நகர்ந்தனர். பல்வேறு அதிகார மையங்களாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.

மணல் ராஜா

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மணல் குவாரிகள் தமிழகம் முழுவதும் உள்ளன. கொள்ளிடம், பாலாறு, காவேரி என்று 10க்கும் மேற்பட்ட ஆறுகளில் அளவுக்கு மீறிய மணல்களை அள்ளி கர்நாடகா, கேரளா என்று பக்கத்து மாநிலங்களுக்கு 'பேக்' செய்து அனுப்பியவர்கள் நாளடைவில் கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் துறைமுகம் வழியாக ஆற்று மணலை அள்ளி அனுப்பினார்கள். பன்னீரின் நெருங்கிய உறவுதான் அதை மேற்பார்வையிட்டது. மணல் கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த மணல் விவகாரம், வில்லங்க நிலம், கொடுக்கல் வாங்கல், பணியிட மாற்றம், அரசு வேலை வாங்கித் தருவது என்று சென்னையில் தனியாக கோலாச்சியது அந்த நெருங்கிய உறவு. சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணியிட மாற்றம் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கான நபர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் தராமல் இழுத்தடித்தது...  என பன்னீரின் 'உறவு' மீது ஏகப்பட்ட புகார். அவருக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையம் எதிரே உள்ள சிங்கப்பூர் ஹோட்டலில் நிரந்தர அறை உண்டு. அங்கு உட்கார்ந்து தனிக்காட்டு ராஜாவா வலம் வந்து கொண்டு இருந்தார். இது போக பெரியகுளம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல், சாலைகள் போடாமலே போட்டதாக கணக்கு எழுதியது, கண்மாய்களை தூர் வாரியதாக கணக்கு எழுதியது என்று எல்லாமே அந்த உறவின் அதிகார துஷ்பிரயோகம்தான் என்கிறார்கள்.

சினிமாவும் ரவீந்திரநாத்தும்

பன்னீரின் மூத்தமகன் ரவீந்திரநாத்துக்கு சினிமா மீது அதிக ஆர்வம். சினிமா தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறார். படங்களின் வெளிநாட்டு விநியோக உரிமம் வாங்கியும் வெளியிடுகிறார். தவிர முக்கியமான திரையரங்குகளை வாங்கி அதை புதுப்பிக்கவும் செய்கிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு போவதுபோல மும்பைக்கு போனவரை உளவுத்துறை விசாரித்தபோது,  மும்பையில் அவர் தனியாக சில தொழில்கள் செய்வதும் மலேசியா, சிங்கப்பூரில்...ஹோட்டல்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் முதலீடு செய்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

தவிர ஒரு சொத்தை வாங்கினால் அதை ரிஜிஸ்டர் பண்ணாமல் அப்படியே ஈடு கடனாக வேறு ஒருவரின் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டு, கடன் வாங்கியது போல கணக்கு காட்டி அந்த சொத்தின் உரிமையாளர்களை வைத்தே அந்த சொத்துக்களை கவனித்து வரச்சொல்லி அதில் வரும் லாபங்களை மட்டும் வாங்கிக்கொள்வாராம். யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் இந்த ரூட்டில்தான் ரவீந்திரன் சொத்துக்களை வாங்கியதாக சொல்கிறார்கள்.

பினாமி சுனாமிகள்

தேனியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் மூவரணிதான் முக்கியமான பினாமிகள். ஐந்து ஆண்டுகளில் 7000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை வேலைகள் அனைத்தும் இவர்கள்தான் பார்த்தது வந்தனர். இன்டர்நேஷனல் பள்ளியும் நடத்தி வருகிறார்கள். அடுத்து அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒருவரும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறையில் நடக்கும் ஒப்பந்தங்களை அதிகமாக எடுத்து வேலை செய்தார்.

இதேபோல பி.ஆர்.பிக்கு நெருக்கமானவர்களுடனும் பன்னீர் நெருக்கம் காட்டினார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அடுத்து இவருக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்  ஒருவர் 800 கோடிகளுக்கு மேல் கேரளாவில் ஏலக்காய் எஸ்டேட் வாங்கி இருக்கிறார். அந்த பைல்கள் அனைத்தும் கார்டனுக்கு போய் இருக்கிறது. ஏற்கெனவே நாம் பார்த்த அபுதாஹிர் என்பவரின் மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவரின் மூலம் அங்கு முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அபுதாஹிருக்கு நெருக்கமானவர்கள் பலரும் ஊட்டியைச் சேர்ந்தவர்கள். அங்கு சில சொத்துக்கள் கைமாறி இருக்கின்றன. மூணாறில் டீ எஸ்டேட்கள் வாங்கப்பட்டுள்ளதற்கு பின்னால் இவர் உள்ளதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இப்படி 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு பன்னீரின் வளர்ச்சி கிடுகிடுவென இருந்தது. அவரின் உறவினர்கள், நண்பர்கள் பலர் ஏற்றம் பெற்றனர். இவை அனைத்தும் அரசல் புரசலாக கார்டனுக்கு அவ்வப்போது உளவுத்துறையின் மூலம் அறிக்கைகளாக வரும். ‘நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பாயத்தானே செய்யும்’ என்று அமைதியாக கவனித்து வந்தது கார்டன். ஆனால் தலைமைதான் பணிவின் டார்கெட் என்று தெரியவந்தபோதுதான் கார்டன் விழித்துக்கொண்டது. அதன்பிறகு பன்னீர் ஓரங்கட்டப்பட்டது, சோதனைகள், விசாரணைகள், ஜெயலலிதாவை சந்தித்து ஒப்புதல் வாக்குமூலம் வாசித்தது என அனைத்தும் ஊர் அறிந்தது. 

ஜெயலலிதா-பன்னீரின் இந்த ஆடுபுலி ஆட்டத்தை பின்னால் இருந்து இயக்கும் சசிகலாவோ கோவில்கோவிலாக தனக்கும் இந்த சம்பவங்களுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் பக்திப்பயணம் போய்க்கொண்டு இருக்கிறார்.

பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை! மினி தொடர்- 1


மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கை, கூட்டணி... என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்... என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம். 

நெற்றி நிறைய விபூதி-குங்குமமும் கும்பிட்ட கையும் அமைதி தவழும் முகமுமாக வலம் வந்த பணிவு பன்னீர் செல்வம் எப்படி இப்படி திகுதிகு வளர்ச்சி கண்டார்?
பன்னீரின் அந்த 'அம்பி டு அந்நியன்' பயணத்தில் இருந்து... 

பேச்சிமுத்து என்கிற ஓ.பன்னீர்செல்வம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஓட்டக்காரதேவர். பெரியகுளத்திற்கு பரவு காவல் செய்ய சொந்தங்களால் அழைத்து வரப்பட்டார். வந்த இடத்தில் வேளாண்மை பயிர்களை பாதுகாக்கும் பணியில் நல்ல வருமானம். அதை சேமித்துவைத்து காசு சேர்க்க ஆரம்பித்தவர்,  பிறகு உறவுக்கார பெண் பழனியம்மாளை திருமணம் செய்துகொண்டார். முதல் குழந்தைக்கு குலதெய்வமான பேச்சியம்மன் பெயரை வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டனர். ஆனால் முதலில் பிறந்ததோ மகன். அதனால் ‘பேச்சிமுத்து’ என்று பெயர் வைத்தனர். அந்த பேச்சிமுத்துதான் தமிழகத்தின் இன்றைய நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

உடன்பிறந்தவர்கள்


பன்னீருக்கு அடுத்து ராஜா, சுசீந்திரன், பாலமுருகன், சண்முகசுந்தரம் என்று ஐந்து ஆண் பிள்ளைகள். பேச்சியம்மாள், சாமுண்டீஸ்வரி, சித்ரா, அமுதா என்கிற நான்கு பெண் பிள்ளைகள் என மொத்தம் ஒன்பது குழந்தைகள். போலீஸ் வேலையில் இருந்த சுசிக்கு நன்றாக சமைக்க தெரியும், அதனால் போலீஸ் வேலையை உதறி விட்டு சொந்தமாக கேட்டரிங் தொழில் செய்து வந்தார். ஓ.பி.எஸ் முதன் முதலாக முதலமைச்சசர் ஆனபோது பெரியகுளத்தில் இருந்து அவரின் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்... என்று பெரியகுளம், தேனியில் இருந்து ஏகப்பட்ட நண்பர்கள் பன்னீரை சந்திக்க சென்னைக்கு சென்றனர். ஆனால் தம்பி சுசி மட்டும் போகவில்லை. 

பன்னீரின் பெயரை ஒருநாளும் அவர் எங்கும் பயன்படுத்தியது இல்லை. அவர் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் தன் வேலையை செய்து வந்தார். அப்படி வேலைக்கு போன இடத்தில் எதிர்பாராத விபத்தில் சுசி இறந்துவிட்டார். சகோதரி பேச்சியம்மாளும் இறந்து விட்டார்.
வட்டித்தொழில் செய்த நிதியமைச்சர் 

மூத்த பிள்ளை பன்னீர்,  அவரது தாயார் பழனியம்மாள் செல்லம். பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் படித்த பன்னீர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே அவரது அப்பாவுக்கு துணையாக ஃபைனாஸ் கொடுத்து வாங்கும் வேளையிலும் ஈடுபட்டார். முதலில் பெரியகுளம் மார்க்கெட்டில் வட்டிக்கு கொடுத்து வாங்கிய அவரது குடும்பம், அடுத்து லாரிகளுக்கு ஃபைனான்ஸ் கொடுக்கும் தொழிலிலும் கால் பதித்தது.

காங்கிரஸ் குடும்பமும்–திமுகவோடு உண்ணாவிரதமும்

பன்னீரின் குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். பன்னீரின் அப்பா, சித்தப்பா... என்று அனைவரும் பெரியகுளம் காங்கிரஸ் நகர் மன்ற தேர்தலில் மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்கள். பன்னீரின் தம்பி பாலமுருகனோ தீவிர திமுக ஆதரவாளர். 1983-84 ம் ஆண்டு குட்டிமணி இறந்த பொழுது திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டங்களில் கலந்து கொண்டவர். உள்ளூர் தேர்தல்களில் திமுகவிற்கு வேலையும் பார்த்தவர். பன்னீரின் எழுச்சிக்கு பிறகு அவரும் அதிமுக பக்கம் வந்துவிட்டார். 

பன்னீர் கல்லூரி படிக்கும் காலங்களில் உத்தமபாளையம், தேனி பகுதிகளில் திரை கட்டி எம்.ஜி.ஆர் படங்கள் போடுவதுண்டு அதோடு இல்லாமல் சேர்த்துவைத்த பணத்தை வாரக் கடைசியில் எடுத்துக்கொண்டு மதுரையில் நடக்கும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்க கிளம்பிவிடுவார்.
எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்துவிட்டு அவரின் ரசிகர் ஆனவர்,  பிறகு நண்பர்களோடு சேர்ந்து அவருக்கு ரசிகர் மன்றம் வைத்தார். 1980களில் எம்.ஜி.ஆர் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் சுற்றுப்பயணம் வந்த பொழுது சைக்களில் எம்.ஜி.ஆரை பார்க்க பன்னீரும் அவரது நண்பர்களும் கிளம்பினர். எம்.ஜி.ஆரை வழி நெடுங்கும் துரத்திதுரத்தி தூரத்தில் இருந்து ரசித்த அதே பன்னீர்தான் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுகவை கைப்பற்ற முயன்றார் என்ற 'அதிர்ச்சி புகாரில்' இன்று சிக்கியுள்ளார்.  

பி.வி டீ ஸ்டாலிலிருந்து மாவட்டச் செயலாளர்


டிகிரி முடித்துவிட்டு என்ன வேலைக்கு போகலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தவருக்கு சொசைட்டியில் லோன் வாங்கி பால்பண்ணை வைக்கலாம் என்று அவரது நண்பர்கள் ஐடியா தந்தனர். பன்னீரும் பால்பண்ணை வைத்தார். கள்ளிப்பட்டியில் தன் குடும்பத்துக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து வந்த இடத்தில் ஐந்து பசு மாடுகளை வாங்கி பால் கறக்க ஆரம்பித்தார். கூட்டுறவு பால் பண்ணைக்கு சப்ளை செய்வது, சில்லறை பாலும் ஊற்றுவது என்று இருந்த பன்னீர் எம்.ஜி.ஆர் மன்ற வேலைகளையும் பார்த்து வந்தார். 

மீதமான சில்லறை பாலை என்ன செய்வது என்று யோசித்தபோது உதயமானதுதான் ‘பி.வி டீ ஸ்டால்’. ‘.பி’ என்பது பன்னீர். ‘வி’ என்பது விஜயன் என்கிற அவரது நண்பர். இன்றளவும் பன்னீரின் டீக்கடை பிவி டீஸ்டாலாக இயங்கி வருகிறது. காரணம் தன் அரசியலில் அந்த டீக்கடை இமேஜ் நன்றாகவே வொர்க் அவுட் ஆனதால் அதை அப்படியே வைத்து இருக்கிறார். ஆனால் அந்த ‘வி’க்கு சொந்தக்காரரான விஜயன் இன்றளவும் பெரியகுளத்தில் பன்னீரின் டீக்கடைக்கு அருகிலேயே ‘ரிலாக்ஸ் கேன்டீன்’ என்கிற பெயரில் கடை நடத்தி வருகிறார்.   
பதவியை பெற்றுத்தந்த நாட்டுக் கோழிக்குழம்பு

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஜெயலலிதாவும்,  ஜானகியும் தனித்தனி அணியாக நின்றனர். ஒன்றுபட்ட மதுரை மாவட்டமாக இருந்து வந்த காலத்தில்,  ஜானகி அணியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்தார் கம்பம் செல்வேந்திரன். அவர்தான் பன்னீருக்கு,  ஜானகி அணி அதிமுகவில் பெரியகுளம் நகர செயலாளர் பதவியை, 1980 களில் முதன்முதலில் பெற்றுத் தந்தார். அப்போது செல்வேந்திரனுக்கும் மதுரை மாவட்டச் செயாலாளர் சேடப்பட்டி முத்தையாவுக்கும் நடந்துவந்த பனிப்போர் அரசியலில் செல்வேந்திரன் பக்கம் நின்றார் பன்னீர்.       

1989-ல் போடிநாயக்கனூரில் சட்டமன்ற வேட்புமனு தாக்கல் செய்ய ஜானகியை அழைத்து வந்தபோது,  ஜெயலலிதாவுக்கு எதிராக வேலைகள் செய்ததும்,  ஜானகியை பத்திரமாகப் பார்த்துக்கொண்டதும் பன்னீர்செல்வம்தான். அதன் பிறகு சில ஆண்டுகளில் எல்லாம் மாறியது. ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதா பக்கம். சேடப்பட்டியின் கை ஓங்கியது. எம்.எல்.ஏ., கட்சிப்பதவி என்று தொடர் வெற்றிகளில் இருந்தார் சேடப்பட்டி முத்தையா. அவர் பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் 1998-ம் ஆண்டு போட்டியிட்டபோதுதான் பன்னீர் செல்வம் சேடப்பட்டி முத்தையாவுக்கு அறிமுகம் ஆனார். 

அதற்கு முன்புவரை செல்வேந்திரனின் ஆள் என்பதால் பன்னீரை சேடப்பட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இருவரும் ஒரே சமூகம் என்பதால் பன்னீரை பிறகு சேர்த்துக்கொண்டார். அதன்பிறகு முத்தையா போகும் இடமெல்லாம் பன்னீருக்கும் மரியாதை. அதன் பிறகு பன்னீருக்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தார். அதன்மூலம் பன்னீருக்கு பல்வேறு தொடர்புகள் கிடைத்தன. 

முத்தையா பெரியகுளத்தில் வென்று நாடாளுமன்றம் சென்றதும் அவரைப் பார்க்க கொடைரோட்டில் அவரின் பண்ணை வீட்டுக்கு செல்வார் பன்னீர். இன்று ஜெயலலிதா முன்பு எப்படி வளைந்து குனிந்து நிற்கிறாரோ,  அதேபோல அன்று முத்தையா முன்பும் நிற்பாராம். 

உட்காரச் சொன்னால்கூட முத்தையாவின் முன்பு உட்கார மாட்டாராம். அந்த பணிவை வைத்துதான் பன்னீர் ஆட்களை கவிழ்ப்பாராம். 

முத்தையா அடிக்கடி வைகை அணையில் உள்ள பங்களாவில் தங்குவார். அதோடு தொகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் ரெகுலராக தங்குவார். நாளைடைவில் முத்தையாவை பார்க்க போகும்போதெல்லாம் அவருக்கு நாட்டுக்கோழிக் குழம்பும், ஆட்டு எலும்புக்கறி குழம்பும் வீட்டில் இருந்து சமைத்து எடுத்துக்கொண்டுபோய் கொடுப்பாராம். அப்போது முத்தையாவுக்கு பந்தி பரிமாறுவது முதல் சாப்பிட்டு கை கழுவும்வரை சகலமும் பன்னீர்தான். 

‘இவ்வளவு பவ்யமா இருக்கும் பன்னீருக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்’ என்று முத்தையா நினைக்க ஆரம்பித்தார்...பிறகு பன்னீரை பெரியகுளம் நகரச் செயலாளர் ஆக்கிவிடுகிறார். அதைத்தொடர்ந்து அவரை பெரியகுளம் நகர மன்ற தலைவர் தேர்தலுக்கும் சீட்டு வாங்கி கொடுத்து வெற்றியும் பெற வைக்கிறார்.